தொலைக்காட்சி இந்தியாவில் 70களில் அறிமுகமாகி இருந்த நேரம். தொலைக்காட்சி பற்றிய என் நினைவுகளோ 70களின் கடைசி வருடங்களில் தொடங்குகிறது. நாங்கள் மத்திய
சென்னையில் வசித்து வந்த சமயம் அது. தெருவுக்கு ஒன்று அல்லது
இரண்டு வீடுகள் அதுவும் பணக்கார வீடுகளில் மட்டுமே தொலைக்காட்சி
இருந்தது.சினிமா என்றால் தியேட்டர் தான் என்று இருந்த காலங்களில்
வீட்டிற்குள் சினிமா அதுவும் வாரம் ஒரு முறை என்பது எவ்வளவு சந்தோஷம்.
டிவி ஓனர்கள் அக்கம் பக்கத்தவர்கள் தங்கள் வீடுகளில் டிவி பார்ப்பதற்க்கு பைசா வசூலித்த கதை ஸ்வாரஸ்யமானது.
என் பக்கத்து வீட்டு முனியம்மா அக்கா [ அதற்கும் வயது 10 தான்] என் அம்மாவிடம் நைசாகப் பேசி பெர்மிஷன் வாங்கி அதோடு ஒரு 25 பைசா காசையும் [ என் டிவி படத்துக்கான டிக்கெட்] வாங்கிக் கொண்டு 5.00மணிக்கெல்லாம் டாண் என்று ஆஜராகி விடும். என் அப்பா இத்தனைக்கும்இரு வாரத்துக்கு ஒரு முறை சினிமா கூட்டி செல்வார். சென்னையின் அத்தனை தியேட்டர்களும் எனக்கு அத்துபடி.அப்படி ஒரு சினிமா பைத்தியம் நான். என் குஷிக்கு கேட்கவா வேண்டும் ?
பொதுவாகவே அந்த காலத்து வீடுகளில் ஹால் நல்ல விசாலமாக இருக்கும். குறைந்த பட்சம் 50 பேராவது ஒரு வீட்டில் படம் பார்க்க
கூடி விடுவார்கள். வீட்டு வாசலில் த்வாரபாலகர் மாதிரி அந்த வீட்டு
பெருசு உட்கார்ந்து தலையை எண்ணி காசை வாங்கி போட்டுக் கொள்ளும். சீக்கிரம் போனால் டிவிக்கு அருகில் தரை டிக்கெட் கிடைக்கும்.
இல்லையென்றால் எட்டி எட்டி படம் பார்த்து கழுத்து வலி தான் மிஞ்சும்.
கொடுத்த நாலணா வேஸ்ட். ஹாலைச் சுற்றி வீட்டு ஓனர்கள் சேர்களிலும்
சோஃபாக்களிலும் அமர்ந்து இருக்க, நடுவில் ஒருவர் மடி மேல் ஒருவர்
உட்காராத குறையாக எல்லோரும் அமர்ந்து தூர்தர்ஷன் லோகோ எப்பொழுது வரும் என்று டிவியையே பார்த்துக் கொண்டிருப்போம்.
கலர் டிவி பெரிதாக அறிமுகமாகாத காலம் அது.கண்ணுக்கு கூலர் போடுவது போல் பச்சை, மஞ்சள், நீலம், பஞ்ச வர்ணம் ?? என பல கலர்களில் டிவி ஸ்க்ரீன்கள் கிடைக்கும். கலர் டிவி இஃபெக்ட்???அதை
வேறு மாட்டி தொலைத்து சாகடிப்பார்கள்.செய்திகள் இடைவேளையில்
வீட்டிற்கு வந்து சாப்பிட்டு விட்டு ஓட வேண்டும். இத்தனை சிரமங்களுக்கு
இடையிலும் நான் சினிமா பார்ப்பேன். சொத்தை சினிமா என்றாலும் அதை பார்த்து விட்டு பள்ளியில் அடுத்த நாள் பந்தா விடலாம் இல்லையா.
நாங்கள் புற நகர்ப் பகுதிக்கு வீடு மற்றிய நேரம், புது இடம் என்பதாலும்,நான் கொஞ்சம் வளர்ந்து விட்டதாலும் எனக்கே யார்
வீட்டுக்கும் செல்ல பிடிக்கவில்லை. dyanora,solidaire ஆகிய இரண்டுbrand-கள்
மட்டுமே இருந்து வந்த காலத்தில் சிக்கனத்தின் சீதனம் sears டிவி எங்கள்
வீட்டு ஓனர் வீட்டில் வந்து இறங்கி என் அப்பாவின் வயிற்றில் புளியை
கரைத்தது. டிவி பார்க்க வாருங்கள், என்று அடிக்கடி ஓனர் எங்களை
அழைப்பது வாடிக்கையானது. அம்மா இதையெல்லாம் விரும்ப மாட்டார்
என்பதால் அப்பாவிடம் சொல்லி ஒரு dyanora டிவி எங்கள் வீட்டுக்கு
வந்தே... விட்டது.
திருகு குமிழ்களும்,நீல ஸ்க்ரீனும், ஷட்டெர் வசதியுடம் கூடிய டிவி வைக்கும் பெட்டி, ஸ்டாண்ட் என்று டயனோரா ஜம்மென்று எங்கள் வீட்டில் வந்து உட்கார்ந்து கொண்டது.அய்யகோ! ஆனால் அதை ஆன் செய்யவும், ஆஃப் செய்யவும் உரிமை அப்பாவிடம் மட்டுமே இருந்தது.
எல்லா வீடுகளிலும் டிவி வந்து விட்டதால் எல்லா மொட்டை மாடிகளிலும்
ஆன்டனாக்கள் நிலை கொண்டன.காக்கா உட்கார பனம் பழம் விழுகிறதோ
இல்லையோ, கட்டாயம் ஆன்டனா அசைந்து டிவி மக்கர் பண்ணும். அப்பா கீழே இருந்து சரி செய்ய ஒவ்வொரு முறையும் ஆன்டனாவை திருப்ப
மாடிக்கு செல்ல நானே பலி கடா ஆக்கப்படுவேன்.மேலே ஏறி இறங்குவது - அல்ல சிரமம். அந்த இடைவெளியில் நாடகமோ,சினிமவோ குறைந்த பட்சம்
audio வாவது கேட்கலாமே அதுவும் போய் விடுமே.ஆடிக் காற்றுக்கும் ஆன்டனாவுக்கும் உள்ள பொருத்தம் ஓஹோ. மீனம்பாக்கம் அருகில் என்பதால் பிளேன்களின்
இரைச்சல் வேறு.நானெல்லாம் விக்ரமாதித்யன் போல, எவ்வ்ளவு
இடையூறு வந்தாலும் விட மாட்டோம்ல.
ஆனால் அந்த நாளைய நிகழ்ச்சிகள் அத்தனையும் தரமானவை. டிவி பெட்டி
தடங்கலுக்கு அடிக்கடி வருந்தினாலும்,எல்லோரும் விரும்பியே டிவி பார்த்தார்கள்.
நான் பேசும் இந்திக்கு வட இந்தியர்கள் சபாஷ் போடும் போது, அத்தனை
பெருமையும் என் டிவிக்கே என நினைப்பேன்.முக்கால்வாசி நேரம் ஒளிபரப்பட்ட இந்தி நிகழ்ச்சிகளால் இந்தி எழுத படிக்க தெரியும் முன்பே,
சரளமாக பேச வந்து விட்டது.இடப்பற்றாக்குறையால் என் இனிய dyanora-வை விற்று விட்டு கலர் டிவி வாங்கிய போது நான் அழுதே விட்டேன்.
இன்று cable,satellite, dish உதவியால் 200,300 channelகள், 24 மணி நேர ஒளிபரப்பு
கட்சிக்கு ஒன்று,நடிகருக்கு ஒன்று,sports,news,cartoons என ஆயிரம் வசதிகள்
இருந்தாலும் எனக்கு ஏனோ டிவி பார்க்க பிடிப்பதேயில்லை.நான் அன்று ரசித்த, மகிழ்ந்த, கொண்டாடிய என் இனிய தொலைக்காட்சின் நினைவுகள் மட்டுமே இன்று என்னிடம் மிச்சம்
இருக்கின்றன.
அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு என்பது எவ்வளவு உண்மை.
I agree with your last paragraph.
ReplyDeleteBTW, yaaru adhu unake sabaash pOtta North Indian? I thought you correct even their Hindi Grammar.
i accept that last punch line in toto and thanks for making me go back to that good old days...
ReplyDeleteMals, You reminded me of my childhood days with your writing. Simple superb.
ReplyDelete